ஜூஜூனா கபுடோவா (Zuzana Caputova ) என்ற பெண், ஸ்லோவேக்கியா நாட்டின் முதல் முறையாக அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் பத்திரிகையாளர் ஜன் குசியாக் (Jan Kuciak) என்பவர் அரசியல்வாதிகளுக்கும், திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கருதப்படும் குற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஆய்வு செயற்பாடுகளில் ஈடுபட்டபோது, தான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்லோவேக்கியாவில் புலனாய்வு பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஸ்லோவேக்கியாவின் பிரதமர் தனது பதவியில் இருந்து விலகி இருந்தார். இதனையடுத்து அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஜூஜூனா கபுடோவா என்ற பெண் எந்த வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஒருவர் என்ற நிலையிலும், ஊழலுக்கு எதிராக களமிறங்கி அந்நாட்டின் அதிபரானார். அவரை எதிர்த்து ஆளும் கட்சி வேட்பாளரான மாரோஸ் செப்கோவிக் போட்டியிட்டார்.
இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய போதும் முதலாவது சுற்று வாக்குப் பதிவின்போது ஜூசானா 40 சதவீத வாக்குகளையும், செஃபோகோவிக் 19 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தார். இந்நிலையில் ஜூஜூனா கபுடோவா 58 சதவீத வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். ஆளும் கட்சியின் வேட்பாளர் மாரோஸ் செப்கோவிக்கிற்கு 42 சதவீத வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. ஸ்லோவேக்கியா நாட்டில், பெண் ஒருவர் அதிபராக தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும்போது இந்த தேர்தல் நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போர் என்று அவர் கூறியிருந்தார். மேலும் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவெடுத்ததற்கு பத்திரிகையாளர் ஜன் குசியாக்கின் மரணம் ஒரு முக்கிய காரணம் என்று தெரிவித்திருந்தார். முன்னதாக சட்டவிரோதமாக குப்பைகளை நிலத்தில் குவித்தமை தொடர்பாக ஸ்லோவேக்கியாவில் 14 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கை முன்னின்று எடுத்து சென்றதன் மூலம், நாடுமுழுவதும் சிறந்த வழக்கறிஞராக ஜூஜூனா அறியப்பட்டார்.
விவகாரத்து ஆன ஜுசானா, இரண்டு குழந்தைகளுக்கு தாயாவார். இதுவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணமும், குழந்தைகளை தத்தெடுப்பதும் சட்டவிரோதமாக ஸ்லோவேக்கியாவில் காணப்படும் நிலையில், அதற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை ஜூசானா கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.