சின்னம்மை எனப்படுகிற சிக்கன் பொக்ஸ் (Chicken pox) நோய் சன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில், மற்றும் வெப்பம் அதிகம் உள்ள காலத்தில் இலகுவில் பரவிவிடும். சனத்தொகை அதிகம் உள்ள இடங்களில் சுத்தம், சுகாதாரம் பெரும் குறைபாடாக இருக்கும் நிலையில், இந்த நோய் மிகவும் விரைவாக மனிதர்களை பீடிக்கின்றது. ஆகவே இந்த வெப்பமான காலநிலை உள்ளபோது, மிக முக்கியமாக நாம் வசிக்கும் வீடு மற்றும் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
இந்த வெப்பமான சூழ்நிலையில் பிள்ளைகளை வெளியில் விளையாட அனுப்பாது வைத்திருப்பதே நல்லது என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள். கடுமையான வெப்பம் நிலவும் கோடை காலங்களில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களை அதிக தண்ணீர் அருந்த ஊக்கப்படுத்துங்கள். தர்பூசணி, வெள்ளரிப்பழம், இளநீர், பப்பாளி உள்ளிட்டவற்றை இந்த வெயில் காலத்தில் உண்டு வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணம் தணியும். மேலும் அதிகளவு பழங்களை உண்பது இந்த காலத்தில் சிறந்த ஒன்றாகும்.
குழந்தைகள் சிறுவர்களுக்கு கீரையை உணவில் நாள்தோறும் சேர்க்கவேண்டும். தினமும் இரண்டுவேளை பிள்ளைகளை குளிக்க வைத்தல் சிறந்ததாகும். இவற்றையெல்லாம் செய்தால், குழந்தைகளுக்குச் சின்னம்மை வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள்.