வித்தியாசமான நாட்டுப்புற பாடல்களைப் பாடி, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்ட செந்தில் - ராஜலட்சுமி தம்பதிகளை பிரபல நாட்டுப்புற கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி, தாக்கிப் பேசியதாக அண்மையில் பரபரப்பாக செய்தியொன்று வெளியாகியது.
தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் பங்குகொண்ட செந்தில் - ராஜலட்சுமி தற்போது வளர்ந்து வரும் பாடகர்களில் முக்கிய நாட்புற பாடகர்களாக மாறியுள்ளனர். இவர்களுக்கு பல திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
ஆனால் இவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நாட்டுபுற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி, கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
அதாவது "செந்தில் - ராஜலட்சுமி இருவரும் பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம் கலந்ததாகவும், ஆபாசமாகவும் உள்ளது. மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டே செந்தில் வேறு ஒரு பெண்ணிடம் தவறாக சைகை செய்கிறார். இதையெல்லாம் சமூக வலைத்தளத்தில் பார்த்து மிகவும் பார்த்து நொந்துப் போனேன்" என புஷ்பவனம் குப்புசாமி கூறியிருந்தார்.
அத்துடன் இவர்களை பார்க்கும் போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா? பேசாமல் பாடுவதை நிறுத்திவிடலாமா என்று கூட யோசிக்கிறேன் என, புஷ்பவனம் குப்புசாமி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய செந்தில், "பாடல்களில் இரட்டை அர்த்தம் இல்லாத பாடல்கள் எங்கே இருக்கிறது. நாங்களும் எங்கள் மூத்த கலைஞர்கள் எழுதிய பாடல்களை பாடியுள்ளோம். கலைஞர்கள் பாடும் போது அதில் ஆபாச வார்த்தைகள் இருந்தால் நாங்கள் அதனை மாற்றி பாடி விடுவோம்.
ஒரு பழமொழி சொல்லுவாங்க "ஆகாதவன் மாமியாருக்கு கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்". அப்படித் தான் இருக்கிறது அவரது பேச்சு. அவர் மட்டும் தான் நாட்டுபுற பாடகரா? நாங்கள் எங்கள் பகுதியில் கற்றுக் கொண்ட பாடலை தான் இப்போது பாடுகின்றோம். இதில் இரட்டை அர்த்தம் எங்கும் கிடையாது, எங்கள் மக்களுக்காக நாங்கள் பாடுகின்றோம், அவ்வளவு தான்'' என்று பதில் கொடுத்துள்ளார்.