ஜப்பானில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம் மற்றும் பருவநிலைகளுக்கேற்ற நகரும் வீடுகள் (Spring House ) அமைக்கப்படுவது நாமறிந்ததே. அந்த வீடுகள் பொதுவாக மரப்பலகைகளால் உருவாக்கப்படும். இவ்வாறு பலகை வீடுகளை பார்த்த எமக்கு இப்போது இன்னுமொரு புதிய ஆச்சரியம், ஜப்பானின் மரகியோட்டோ வீடு போன்ற அமைப்பிலான ரயில்.
ஜப்பானில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதியதாக மர கியோட்டோ வீடு போன்ற ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கி.பி 794 முதல் 1868 வரை பண்டைய ஜப்பானின் தலைநகரமாக இருந்த நகரம் கியோட்டோ. இந்நகரில் மரத்தினாலான வீடுகள் மிகவும் பிரபலமானவை. இந்த வீடுகள் அனைத்து தரப்பினரையும் கவரும். இந்த வீடுகளை மையப்படுத்தி புதிய ஆடம்பர ரயிலை ஜப்பானிய ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. கியோ- கராகு ரயில் என அழைக்கப்படும் புதிய அதிவேக, கியோ ரயிலின் இரண்டாவது தலைமுறை தயாரிப்பாகும்.
இது ஒசாக்கா உமேடா மற்றும் கியோட்டோ கவரமச்சி நிலையங்களுக்கு இடையே இயங்கும் என கிரேபி நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த ரயிலின் உள் கட்டமைப்பு “ஜப்பானிய நவீன, கியோமச்சியா (கியோட்டோவில் உள்ள மரத்தாலான வீடுகள்) என்பதாகும். இந்த ரயிலில் இணைக்கப்படும் ஆறு கட்டமைப்புகளும் அந்நாட்டின் பருவகாலங்களை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி முதல் கட்டமைப்பு இலையுதிர்கால உணர்வை அளிக்கும் வகையிலும், 2வது கட்டமைப்பு மூங்கில்களுடன் குளிர்கால உணர்வை அளிக்கும் வகையிலும், மூன்றாவது கட்டமைப்பு செர்ரி மலர்களுடன் வசந்த கால உணர்வை அளிக்கும் வகையிலும், 4வது கட்டமைப்பு கோடைகால உணர்வை குறிக்கும் வகையிலும், ஐந்து மற்றும் ஆறாவது கட்டமைப்புகள் மைக்ரோ சீசன்களை பெருமைப்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கூடுதலாக, கிரேபி நிறுவனம் ரயிலின் அமைப்புகளில் வட்டமான ஜன்னல்களை அமைத்துள்ளதோடு, உள்புறம் ஜப்பானிய தோட்டங்களையும் உருவாக்கியுள்ளனர். இது பயணிப்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த ஆடம்பர ரயிலுக்கு சிறப்பு டிக்கெட் எடுக்கவோ முன்பதிவு செய்யவோ தேவையில்லை. ரயில் இயக்கப்படும் நேரத்திற்கேற்ப ரயில் நிலையங்களில் சுலபமாக டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். டிக்கெட் விலை சுமார் 400 யென்கள். கியோ- கராகு ரயில் வரும் மார்ச் 2019ல் தனது முதல் பயணத்தைத் துவக்க உள்ளது.