2,223 Views
நாளைய உலகின் தூண்களை, கல்வியால் நல்லொளி வீச வைத்து புதிய உலகைப் படைக்கும் ஆசிரியப் பெருந்தகைகளின் சேவையை ஏற்றிப் போற்றும் மகத்தான இந்நாளில் எங்களை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகைகளையும் மனதில் ஏற்றி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது சூரியன் வானொலி..!
ஆசிரியர் தினம் கொண்டாடப்படவேண்டும் என்ற சிந்தனை20ஆம் நூற்றாண்டிலேயே வலுப்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.UNESCO வின் கருத்துப்படி கல்விக்கும், அதன் அபிவிருத்திக்குமான ஆசிரியர்களின் பங்களிப்பை போற்றியே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக ஆசிரியர் தினம் சர்வதேச அளவில் அனுஷ்டிக்கபடுவதாக “கல்விக்கான சர்வதேச நிறுவனம்” நம்புகிறது, அத்தோடு 1966 மற்றும் 1997 ம் ஆண்டுகளின் பிரேரிப்புக் கொள்கைகள் உலகளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதில் கருத்தாக இருக்கின்றது.
1994 ம் ஆண்டிலிருந்து உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5 ம் திகதி கொண்டாடப்படுகின்றது.ஒவ்வொரு நாடும் தமது நாட்டிலிருந்த கல்வியாளர் அல்லது கல்விக்கான மிக முக்கியமான மைல்கல் எட்டப்பட்ட நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றது. அந்த வகையில்இலங்கையில் அக்டோபர் 6ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஆசிரியர்களின் பணி மகத்தானது.நாளைய சமுதாயம் வாழ்வு பெற வேண்டுமென்பதிலேயே அவர்களுடைய முழுக்கவனமும் இருக்கின்றது.கல்வியால் மட்டுமன்றி ஒழுக்கங்கள், பண்புகள், கலை கலாசாரம் என்பவற்றிலும் மாணவர்களை உயர்வு காண வைப்பதிலேயே தமது வாழ்வை அர்பணித்துள்ளனர்.
அகில உலகில் தடம் பதித்தவர்கள், இன்று உயர் நிலையில் இருப்போர் எல்லோரும் தமது உயர்வுக்கான காரணமாகக் காட்டுவது தமது ஆசான்களைத்தான்.குடும்பப் பணிகளோடு மாணவர்களையும் தமது பிள்ளைகளாக எண்ணி அன்பால் அரவணைத்து ஆதரவளித்து அறிவு புகட்டுவதில் ஆசிரியர்களுக்கு நிகர் ஆசிரியர்களே..!
தாம் கற்பிக்கும் மாணவர்கள், தங்களை விட உயர்நிலைக்கு செல்வதற்கு வழிசமைத்தவர்களே இந்த ஆசிரியர்கள்.பொறாமைப்படவோ மற்றவர்களை பாதாளத்தில் தள்ளவோ என்றுமே இவர்கள் எண்ணியதில்லை.இந்த நிலையில் இவர்கள் கடவுளுக்கும் சமனானவர்களாக இருக்கின்றனர்.ஆகவே அவர்களுடைய சேவையைப் போற்றுகின்றோம், வாழ்த்துகின்றோம்.
ஆனால் தற்போது சில ஆசிரியர்களது செயற்பாடுகளினால் முழு ஆசிரியப் பணியில் உள்ளோருக்கும் அவப்பேராகின்றது. தம்மிடம் நம்பி கல்விகற்க வருவோரை துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்துகின்றனர். அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.
தகவல் வெளியில் கசியும் வரை இவர்களது செயற்பாடுகள்தொடர்கின்றன.அத்தோடு குடும்ப பிரச்சனைகள், பாகுபாடு காரணமாக பிள்ளைகளைப் பழிவாங்குதல் போன்றனவும் நடைபெறுகின்றன. இதனைவிட உளப்பாதிப்புகளையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளும் நடைபெறுகின்றன
அளவுக்கதிகமான தண்டனைகள் உடல் உள ரீதியாகவழங்கப்படுகின்றன.இதனால் ஆசிரியர்களைப் பார்த்து பயப்படும் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.குறித்த ஆசிரியர்களின் பாடங்களில் பங்குபற்ற மாணவர்கள் அஞ்சுகின்றனர்.நீண்ட காலத்துக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.இது கண்டிக்கத்தக்கது.
கல்வியைக் காசாக்கும் நடவடிக்கைகளும் சிலரினால் மேற்கொள்ளப்படுகின்றன.பாடசாலைகளில் கற்கும் மாணவர்களை வலிந்து தமது கல்வி நிலையத்துக்கு மேலதிக வகுப்புக்கு அழைக்கும் செயற்பாடுகளும் இல்லாமலில்லை.அவ்வாறு வராத மாணவர்களுக்கு பாடசாலைகளில் தண்டனைகளையும் பரீட்சைகளில் குறைந்த புள்ளிகளையும்வழங்குகின்றனர். இலவசக்கல்வி வழங்கப்படும் இலங்கைத் திருநாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது.
மகத்துவமான இத்திருநாளில் ஆசிரிய பெருந்தகைகளை, மீண்டும் போற்றுகின்றோம். அவர்களுடைய சேவை சிறக்க வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.