தமது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சி இல்லை என்று, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
நீண்டகாலமாக அரசியல் தீர்வு குறித்து பேசப்படுகின்ற போதும், மக்கள் எந்த மாதிரியான அரசியல் தீர்வினை எதிர்பார்க்கின்றனர் என்ற விடயம் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
அத்துடன் சமுக தேவைகள் உள்ளிட்ட விடயங்களை விஞ்ஞான ரீதியாக ஆராயப்படவும் இல்லை.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த மக்கள் இயக்கம்.
இதில் அரசியல் கட்சிகளின் பேதங்கள் இன்றி, சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்களாக பலர் பங்குகொண்டுள்ளனர்.
இதில் அரசியல் தீர்வு மற்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்படுமே தவிர, அரசியல் கட்சியாக ஒருபோதும் செயற்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது புதிய தலைமைத்துவ உருவாக்கமாகவும் எடுத்துக் கொள்ள முடியாது என்றும், சீ.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.