இலங்கையின் வான்வழிப் போக்குவரத்துத் துறையில் புதியதொரு அத்தியாயமாக, பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய அதிநவீன ட்ரோன் சேவையை முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்த இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAA) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒவ்வொரு ட்ரோனும் ஒரே தடவையில் 6 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
இலங்கையில் இதனைப் பெரிய அளவில் விரிவுபடுத்துவதற்கு முன்னதாக, அதன் பாதுகாப்பு, செயல்பாட்டுத் திறன் மற்றும் விமானப் போக்குவரத்து ஒழுங்குவிதிகள் ஆகியவற்றை மதிப்பிடுவதற்காகவே இந்த முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச விமானப் போக்குவரத்துத் தரநிலைகளுக்கு அமைவாக இச்சேவை பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்த பின்னரே, இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில், தெற்காசிய பிராந்தியத்திலேயே பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்திய முதல் நாடாக இலங்கை வரலாற்றுச் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.