இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் சவ்ரவ் கங்குலி.இந்திய கிரிக்கெட் கட்டமைப்பை இரண்டாயிரமாம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட்டுடன் சேர்ந்து மிகசிறப்பாக செதுக்கி எடுத்தவர்தான் இந்த சவ்ரவ் கங்குலி.
சர்வதேச அளவில் பல துடிப்பான இளம் வீரர்களை உருவாக்கி உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பான அணியாக உருவாக்கி காட்டியவர்.
இன்றும் இந்தியர்களின் இதயம் வென்ற கதாநாயகனாக வலம் வரும் கங்குலியே இந்திய அணியின் இதுவரைக்குமான சிறந்த அணித்தலைவர் என்று பெருமையோடும் பேசப்படுபவர்.
உலக கிண்ணம் ,டெஸ்ட்,ஒருநாள் தரவரிசைகளில் இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டுவந்த தற்போதைய அணித்தலைவர் MS தோனியைவிடவும் கங்குலியின் கிரிக்கெட் ஆளுமை என்பது கொஞ்சம் வித்தியாசமானது.
ஒரு சிறந்த அணியின் தலைவராக இல்லாமல் ,சாதரணமான ஒரு அணியின் சாதனை தலைவர் கங்குலி என்கின்ற வாதப்பிரதிவாதங்களும் இந்தியாவில் இப்போதும் அதிகம் இருக்கிறது.
இந்தநிலையில் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் அமர்த்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக அறிய முடிகின்றது.
Bengal கிரிக்கெட் சபையின் முக்கிய நபரான ஜக்மோகன் டால்மியா இப்போது இந்திய கிரிக்கெட் சபையின் தலைமைப் பதவியை வகிக்கும் நிலையில் டால்மியாவின் செல்லப் பிள்ளை என அறியப்பட்ட கங்குலி அந்த பதவியை குறிவைத்திருக்கிறார்.
இருவருக்குமிடையில் ரகசிய சந்திப்பொன்று இதுதொடர்பிலும் நடைபெற்றிருப்பதாகவும் செய்திகள் கசிந்திருக்கின்றன.
ஏற்கனவே 2011 ம் ஆண்டு உலக கிண்ணத்தை வெற்றிகொண்ட பயிற்சியாளர் கரி கேர்ஷ்டனின் ஓய்வின் பின்னர் அந்தப் பதவி கங்குலிக்கு கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தாலும் அது நடக்கவில்லை.
பின்னர் வெளிநாட்டு மண்களில் இந்திய அணி அதிகமான டெஸ்ட் தோல்விகளை சந்தித்த காலகட்டத்திலும் தற்போதைய பயிற்சியாளரான பிளேட்சரை நீக்கி புதியவரை நியமிக்கும் முயற்சி நடந்தாலும், உலக கிண்ணத்தை குறிவைத்து அவரது பயிற்சிக் காலம் அப்போது மேலும் ஓராண்டுக்கு நீடிக்கபட்டது.
இந்த நிலையில் உலக கிண்ணத்தோடு நிறைவுக்கு வந்துள்ள பிளட்சரின் பதவியை நீடிப்பு செய்யாமல் அதற்கு பதிலாக ஒரு இந்தியரை / கங்குலியை அந்த பதவியில் நியமிக்கும் நடவடிக்கை அதிகம் மேற்கொள்ளபடுகின்றது.
2000 ம் ஆண்டு முதல் ஜான் ரைட்,கிரேக் சாப்பெல்,கரி கேர்ஸ்டன்,டங்கன் பிளட்சர் ஆகிய வெளிநாட்டுப் பயிற்சியாளர்களே பயிற்சியாளர்களாக இருந்த நிலையில் அந்தப் பதவிக்கு பொருத்தமானவராக கருதப்படும் கங்குலி இப்போது நியமிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும் இந்தப் பதவிக்கான போட்டிநிலையில் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட்,மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரது பெயரும் பரீசீலிக்க்கபடுகிறது.
ஆயினும் எதிர்வரும் 26 ம் திகதி இந்திய கிரிக்கெட்டின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இறுதி முடிவு எட்டப்படும் என்று நம்பபடுகின்றது.
தோனியால் ஓரங்கட்டப்படுபவர்கள் என்று பேசப்படும் சேவாக்,யுவராஜ் ,ஹர்பஜன்,சகீர்கான் போன்ற வீரர்களை உருவாக்கியவர் கங்குலி என்பதும் கவனிக்கத்தக்கது.
தி.தரணீதரன்