இலங்கைக்கு வருகை தருவதற்காக விமான நிலையத்தில் சில நாட்கள் காத்திருந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் மத்திய கிழக்கு நாடொன்றின் விமான நிலையத்தில் வைத்து உயிரிழந்துள்ளார்.
30 வயதுடைய பசறை - அரலியாகம பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான பிரியங்கா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த பிரியங்கா தொழில் தருணரால் சித்திவதைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிரியங்கா தனது உறவினர்களுக்கு அறியபடுத்தியதை தொடர்ந்து உறவினர்களால் விமான பயண சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பயண சீட்டினை கைப்பற்றிய தொழில் தருணர் விமான பயணசீட்டில் பயணிக்கும் திகதியை மாற்றியுள்ளார்.
இந்நிலையிலேயே, பிரியங்கா வீட்டிலிருந்து வெளியேறி வருகை தராத விமானத்திற்காக காத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பிரியங்காவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிரி ஜயந்த விக்ரமரத்னவினால் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பிரியங்காவின் தந்தையிடம் வாக்குமூலமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரியங்காவின் தந்தை இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.
எனக்கு எட்டு பிள்ளைகள், இரண்டாவது மகள் பிரியங்கா ஆவார், அவர் திருமணம் முடித்தவர், ஆனால் அவரின் பிள்ளைகள் இருவரும் எங்கிருக்கின்றனர் என தேட முடியவில்லை, தனது இரண்டாவது மகளான பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இரண்டாம் திகதி பணிப்பெண் தொழிலுக்காக டுபாய் சென்றார்.
சென்றதன் பின்னர் குறித்த அவர் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
தாம் பணிபுரியும் வீட்டார் அனைவரும் நற்பண்புடையவர்கள் என கூறினார். சிறிது காலம் சென்றதும் வீட்டுரிமையாளரால் தனக்கு பாலியல் தொல்லை காணப்படுவதாக தெரிவித்தார்.
பிரியங்கா உறவினர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றிலும் தான் பலரால் பாலியன் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரியங்காவிற்கு விமான பயணசீட்டினை அனுப்பி வைத்தோம்.
பிரியங்கா விமான பயணசீட்டினை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இலங்கைக்கு இன்று மற்றும் நாளைய தினங்களில் விமானம் செல்வதற்கான வாயப்பில்லை என விமான நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர் விமான நிலையத்திலேயே பல நாட்கள் காத்திருந்துள்ளார்.
ஆனால் எந்த ஒரு விமானமும் இலங்கையை நோக்கி புறப்படுவதற்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாரம் எதுவுமின்றி அவர் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார்.
இந்நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியங்காவின் மரணத்திற்கான காரணத்தினை தெளிவாக கூறமுடியாதுள்ளதாக மரண விசாரணை வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.