இந்தியாவில் கடலூரை அடுத்த காரைக்காடு அங்காளம்மன் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது தாயாரும் தற்கொலை செய்த சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது.
கடலூரை சேர்ந்த காத்தவராயன் ராஜலட்சுமி ஆகியோரின் மகன் விக்னேஷ். இவருக்கு 20 வயது. இவர் கடலூரில் உள்ள தனியார் polytechnic என்று சொல்லக் கூடிய உயர் தொழில் நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு கற்று வந்தார். விக்னேஷ் இன்று காலை தனது தாயாரிடம் கல்லூரியில் பரீட்சை எழுதுவதற்கு வேண்டிய பணத்தினை தரும்படி கேட்டுள்ளார்.
தாயார் ராஜலட்சுமி ATM கார்டை கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கின்றார். ATM கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது பணம் ஏதும் வரவில்லை. வீட்டுக்கு வந்து பணம் வராத விடயத்தை விக்னேஷ் சொல்லியுள்ளார். ஆனால் ராஜலட்சுமி வங்கி கணக்கில் இலங்கை பெறுமதிக்கு 11,363 ரூபா இருந்துள்ளது. ஏன்? பணம் வரவில்லை என்ற கேள்வியை அவர் தனது மகனை நோக்கி கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் கோபம் வந்துவிட்டது. யார் கூறுவது பொய் என்ற சந்தேகம் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தாயாருக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் கேப்பர் குவாரி புகையிரத நிலையம் அருகே இன்று காலை 8.40 மணியளவில் நடந்து போய்க்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அந்தவழியாக வந்த எக்ஸ்பிரஸ் புகையிரதம் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். விக்னேஷ் இவ்வாறு தற்கொலை செய்த தகவல் அவரது தாய் ராஜலட்சுமிக்கும் தெரியவந்தது. இந்தச் செய்தி கேட்டு பெற்ற தாய் கதறி அழுது துடித்தார். பின்னர் மனவேதனை அடைந்து வீட்டுக்குள் சென்றவர் தூக்குபோட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் பிணமாக தொங்கிய ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல புகையிரதத்தில் அடிப்பட்டு இறந்த மாணவர் விக்னேஷ் உடலை கடலூர் ரெயில்வே காவல்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கடலூர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.