இந்தியா - பாகிஸ்தான் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்ச்சினைகளை தணிக்க தாம் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறோம் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்திய ராணுவத்தினால் மேற்கொள்ளப் பட்ட தாக்குதல் காரணமாக முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தாக்குதல் மேற்கொண்டதில் அதில் ஒரு விமானம் இந்திய ராணுவ வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், குறித்த விமானத்தை செலுத்திய ராணுவ வீரர் அபிநந்தை தாம் கைது செய்த காணொளியையும் பாகிஸ்தான் வெளியிட்டது.
இருநாடுகள் இடையே கடும் பதற்றம் முற்றியுள்ள நிலையில் இதன் தாக்கம் பாரிய அளவில் இருப்பதன் காரணமாக, உலக நாடுகள் பலவும் சமரச முயற்சியில் இறங்கியுள்ளன. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் குறித்த தாக்குதல்கள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
குறித்த சர்வதேச நாடுகளால் இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாட்டை கடைபிடித்து அமைதியை கொண்டு வர வேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க வியட்நாம் சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது நிலவும் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம்.
இரண்டு நாடுகளுக்கிடையே உருவாகியிருக்கும் அதிகமான பதற்றத்தை தணிப்பதற்கு மத்தியஸ்தம் வகிக்க நாம் தயாராக இருக்கிறோம். அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.