கடந்த 2014-ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் 5 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார்கள். இவர்கள் மூலம் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டு இருந்த நிலையில், தீடிரென ஒரு அறிவிப்பு வெளியாகி பெரும் அதிர்வலையை அங்கு ஏற்படுத்தியிருந்தது. அங்குள்ள இராணுவ ஆதரவு பெற்ற கட்சியான பாலங் பிரச்சா ரத் கட்சி முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தலைமையில், அரசாங்கம் அமைக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. ஆனால் தொடர்ச்சியான முறைப்பாடுகள் மற்றும் தவறான தகவல்கள் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால் அதிகாரப்பூர்வமான முழுமையான முடிவுகள் மே மாதம் வரை வெளியிடப்படாது என, தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டி உள்ள முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா, முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆக இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படுமா ? என்பது தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.