இலங்கை சோசலிச குடியரசின் 8 வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
முதலாவதாக சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பொது செயலாளர்; தம்மிக்க தசநாயக்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
அதனையடுத்து நாடாளுமன்ற செயற்பாடுகள் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு, முதலாவது அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனங்களை சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைய புதிய நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் முதல் நாளன்று ஆசன ஒழுங்கமைப்புகள் இடம்பெறாது.
சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய உறுப்பினர்களின் ஆசனங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என நிலையில் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர் தமக்கு விருப்பமான இடங்களை அமர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற பொது செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
ரணில் நான்காவது தடவையாக பிரதமராக பதவியேற்றமை , 3 முதலமைச்சர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியமை , முன்னாள் ஜனாதிபதி எம்.பி ஆகியுள்ளமை உட்பட சிறப்பம்சங்களை இப் பாராளுமன்றம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.