இயற்கை அனர்த்தத்திற்கும், பேரவலத்திற்கும் குறைவில்லாத நிலையை எதிர்நோக்கியுள்ளது நம்நாடு. தற்போது நிலவும் அசாதாரணமான காலநிலை, மலையகத்தை மட்டுமன்றி கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
ஒரு சில மாதங்களுக்கு முன் நிலவிய கடும்வரட்சி, தற்போதைய தொடர்ச்சியான அதிக மழைவீழ்ச்சி, அதீத காற்றின் வேகம், கடற்கொந்தளிப்பு,மண்சரிவு என்பவற்றினால் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுமே ஏதோவொரு இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு மலையகமே கலங்கிப்போயுள்ள நிலையில், தற்போது கொட்டிக்கொண்டிருக்கும் மழையால் முக்கியமான சில நீர்நிலைகளான மேல் கொத்மலை, காசல் ரீ, தெதுரு ஓயா போன்றவற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் களனிகங்கை, களுகங்கை, அத்தனகல ஓயா என்பன பெருக்கெடுக்கும் அபாயமும் அந்த நீர்நிலைகளை அண்டி வாழ்கின்ற மக்களை நோக்கி வரவுள்ளது.
இதேவேளை, "ஹுட்ஹுட்" சூறாவளி இந்தியாவை தாக்கி, வலுவிழந்து விலகிச்சென்றுள்ள நிலையில், அரபிக்கடலில் உருவான "நிலுபர்" எனும் மற்றுமொரு சூறாவளி 130கிலோ மீற்றர் வேகத்தில் இன்று வட இந்திய குஜராத் மாநிலத்தை தாக்கவுள்ளது. இதன் தாக்கம் நமது நாட்டு காலநிலையிலும் ஏதாவது தாக்கங்களை ஏற்படுத்துமா என அவதானம் செலுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
இது இவ்வாறிருக்க,இன்றும் 150மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமையும் இங்கே நோக்கத்தக்கது.