கமல் என்னும் மாபெரும் கலைஞன் அரசியலுக்கு வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லைதான். குழந்தையிலேயே பார்த்து பார்த்து பழக்கப்பட்ட கமல், கட்சியை ஆரம்பித்து இந்த அளவுக்கு சிறப்பாக நடத்துவார் என்பது யாராலும் நம்ப முடியாத உண்மைதான்
சினிமாதான் தன் மூச்சு, உலகம், உயிர் என்றே இருந்துவிட்ட கமல் திடீரென ட்விட்டருக்குள் நுழைந்தார்... இதற்கு காரணமும் உண்டு. கமலை பொருத்தவரை எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டார் என்ற கருத்து அந்த காலத்திலிருந்தே இருந்தது. ஆனால் விஜயகாந்த், ரஜினி போன்றோர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள் என்பதால் ஒட்டுமொத்த அரசியல் பிரமுகர்கள், பெரிய தலைகள், மீடியாக்கள் என அனைவருமே இவர்களை தாங்கி பிடித்தார்கள்.
அதனால் யாருமே இவர்களை பகைத்து கொள்ள விரும்பவில்லை. ரஜினி போன்றோரை உயர்த்தி பிடிக்க கமலை மட்டம் தட்டும் வேலைகளிலும் இறங்கியதையும் தமிழகம் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தது. அது மட்டும் இல்லை... கமல் எந்த நல்ல விஷயத்தை சொன்னாலும், சமூக கண்ணோட்டத்துடன் சொல்லப்படுகிற கருத்துக்கள் பெரும்பாலும் திரித்தே மக்களிடம் சொல்லப்பட்டன.
கமலின் கருத்துக்கள் சர்ச்சையாக்கப்பட்டு, விளம்பரமாக்கப்பட்டன. இப்படி தன்னுடைய கருத்துக்கள் முழுமையாக மக்களிடம் போய் சேராத காரணத்தினாலேயே நேரிடையாக ட்விட்டரை கையில் எடுத்தார் கமல். தனக்கும் மக்களுக்கும் இடையே யாரையுமே உள்ளே நுழைய விடவில்லை. தன் மனதில் பட்ட கருத்துக்கள் நேரிடையாகவே மக்களிடம் செல்ல தொடங்கின. ஆனாலும் இதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது
ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி ஸ்டைல் உள்ளது போல கமலின் எழுத்துக்களுக்கும் ஒரு பாணி உண்டு. ஆனால் அவரது கருத்துக்கள், எழுத்துகள் யாருக்கும் சரியாக புரியவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. சொல்லவேண்டிய கருத்தை புரிந்து கொள்ள முடியாமல் போகும் அளவுக்கு அவரது வார்த்தைகள் கடினமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ட்விட்டரை அடுத்துதான் அரசியல் கட்சியை கமல் ஆரம்பிக்க தொடங்கினார்.
தான் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்தாலும் தன்னுடைய கட்சியை ஜனநாயக ரீதியாகவே நடத்தி வருகிறார். தன் கருத்தை தன் கட்சி உறுப்பினர்கள் மீது பகுத்தறிவை கமல் திணித்தது கிடையாது. அதேபோல மதவெறிகளுக்கு எதிராகவே தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார். ஆனால் மதத்துக்கு எதிராக இதுவரை கமல் குரல் கொடுத்தது இல்லை. "பக்தி நிறைந்த ஒரு பெண் என் நெத்தியில் குங்குமம் வைத்தால் அதை நான் அழிக்க மாட்டேன்.. இதுதான் என் பகுத்தறிவு" என்றவர் கமல். அதே நேரத்தில் "நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவு செய்ய கூடாது" என்று மாட்டிறைச்சிக்கு எதிரான கருத்தையும் துணிந்து சொன்னவர்.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்... இதுதான் என் வழி, இதுதான் பாதை, இதுதான் என் கடமை, இதுதான் என் ஜனநாயகம், இதுதான் என் பகுத்தறிவு, இதுதான் என் அரசியல் என்று இதுவரை தடைகற்களை தூள் தூளாக்கிவிட்டு சென்று கொண்டிருக்கிறார் கமல். இதேபோல என்றுமே தன் மய்யம் மூலம்... இழந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தை கமல் மீட்டெக்கவும், நீண்ட ஆயுளுடன் வாழவும் நாங்களும் வாழ்த்துகிறோம்