இப்போதெல்லாம் நீரிழிவு நோய் யாருக்கு வரமால் இருக்கிறது என்ற கேள்விதான் எழுகின்றது. ஏனென்றால் பெரும்பாலும் பெரியவர்களை நீரிழிவு இலகுவாக தாக்கி வரும் நிலையில், இப்போது சிறுவர்களையும் நீரிழிவு விட்டு வைக்கவில்லை.
இப்போது 5 வயது குழந்தையை கூட நீரிழிவு தாக்கும் என்ற துர்ப்பாக்கிய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம். இந்த பிரச்சினையில் இருந்து எங்கள் சின்னச் சிறுசுகளை நாம் மிகுந்த பொறுப்புடன் கவனிக்க வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் உண்ணும் உணவுகள் எவ்வாறு இருக்கிறது? அவற்றில் எந்தளவு சீனியின் அளவு உள்ளது என்று நாம் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.
குழந்தைகளை பொறுத்த வரையில் ஐஸ்க்ரீம், சொக்லேட், சோஸ், ஜாம், பிஸ்கெட், கேக், பாண் போன்ற நொறுக்குத்தீனிகளை மிக அலாதி பிரியத்துடன் உட்கொள்வார்கள். குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு புரியாத வயது. ஆனால் பெரியவர்களுக்கு விளங்கும்தானே? ஆகவே பெரியவர்கள்தான் இந்த விடயங்களில் அதி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த மாதிரி வகை உணவுகளில் சீனியின் அளவு நிறையவே இருக்கும். நூடுல்ஸ், பிஸ்தா, சிப்ஸ், மக்ரோனி இன்னும் இதர இனிப்பு உணவுகளில் உப்பு மற்றும் சீனி போன்றவற்றின் அளவுகள் அதிகமாக சேர்த்திருக்கிறார்கள். இதை விட மிக மோசம் குடிபானங்கள்தான். குழந்தைங்கள் விரும்பி அருந்தும் பானங்களில் சீனியின் அளவு மிக மிக அதிகமே. இதில் நம்ம நாட்டவர்களுக்கு சுகாதார அமைச்சு ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளது. குடிபானங்களில் சேர்க்கப்படும் சீனியின் அளவிற்கு ஏற்றவகையில் வர்ணக் குறியீடு இட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இப்படி இனிப்பு, உப்பு, காரம் அதிகமாக சேர்க்கப்படும் உணவுகளைத் தொடர்ந்தும் அளவுக்கு மீறி சாப்பிடும்போது உடல்பருமன் அதிகரித்து நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படக் காரணம் ஆகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சிறுதானியங்களில் செய்யும் இனிப்பு வகைகள், கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்று நம்நாட்டு உணவுகளை முடிந்தவரை வீட்டிலேயே தயாரித்து சிறுவர்களுக்கு கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.
இந்த கேக், சொக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றுக்கு முடிந்தவரை குறைத்து, எப்போதாவது ஒரு தடவை வேண்டியோ செய்தோ கொடுக்கலாம். அரிசி உணவைக் குறைத்து சிறுதானியங்களில் செய்த காலை உணவுகளையும், சிற்றுண்டி உணவுளையும் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கட்டாயமாக காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். காய்கறிகளில் ஜூஸ், சூப் போன்றவற்றையும் பழக்கப்படுத்தலாம். இனிப்பு சேர்க்காத ஃப்ரூட் ஜூஸ் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் இதன் சுவையை அறிந்தனர் என்றால் இவ்வாறான உணவுகளுக்கு பழக்கமாகி விடுவார்கள். இதோடு நின்றுவிடாமல் நீரிழிவு நோய் தொடர்பிலும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இந்த விழிப்புணர்வை வீட்டில் பெற்றோர்கள் மாத்திரம் சொல்லிக் கொடுக்காமல், பாடசாலைகளில் ஆசிரியர்களும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
அத்துடன் குழந்தைகள் ஓடி ஆடி விளையாட நாம் வழிவகை செய்ய வேண்டும். இந்த நடை முறைகளை நமதுகுழந்தைகள் விடயத்தில் கவனம் செலுத்துவோமாக இருந்தால், நம் செல்வங்களை நீரிழிவு என்ன எல்லா நோய்களில் இருந்தும் விடுபட்டு ஆரோக்கியமானவர்களாக வாழ வைக்கலாம். அதுதானே நம் அதீத அவா !