பாகிஸ்தான் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் தாக்குதல் நடத்தி, இரண்டு நாடும் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தி விட்டன.
இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை கொமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்து அவரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அறிவித்தது.
இதற்கான வீடியோ ஆதாரம் வெளியாகி இருந்தது. கைதாகிய இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்பதற்காக இந்தியா ராஜாங்க ரீதியாக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் முக்கியமாக ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, அபிநந்தனை சத்தமின்றி தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, இந்தியா வலியுறுத்தியது.
இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தன. அபிநந்தன் விவகாரம் தொடர்பில் ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இன்று அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
அபிநந்தனின் விடுதலை தொடர்பில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என நேற்று அறிவித்தார்.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசைகளில் தட்டி ஆதரவு தெரிவித்தாக கூறப்படுகிறது. எனவே இந்திய விமானி விடுதலையாகுவதை சர்வதேசமே எதிர்பார்க்கும் முக்கிய தருணம் இன்றாகும்.