அண்மைக்காலமாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் அவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றிராத போதும், எப்படியாவது ஒரு 'சூப்பர்ஹிட்' படத்தைக் கொடுத்து மீண்டும் ரசிகர் ரசிகைகளின் மனதில் தனக்கென இருக்கும் தனியிடத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் சிறப்பான கதைகளாகக் கேட்டு தேர்வு செய்து நடித்துக்கொண்டிருக்கின்றார் நடிகர் சூர்யா.
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் சில படங்கள் திரை கண்டு லாபத்தைக் கொடுத்திருந்த நிலையில், தற்போது "இறுதிச்சுற்று" படத்தை இயக்கி வெற்றிகண்ட இயக்குனர் சுதா கொங்காரா சூர்யாவை நடிக்க வைக்கும் புதிய படமொன்றை, தானே தயாரிக்கவுள்ளார் நடிகர் சூர்யா.
'2D எண்டர்டய்ன்மெண்ட்' எனும் நடிகர் சூர்யாவின் சொந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இந்திய ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கவுள்ளார் சூர்யா. படமாகவிருக்கும் இந்தப் கதை முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியும், பிரபல தொழிலதிபருமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றுப் பின்னணியில் உருவானது என்கின்றனர் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள்.
உருவாகவிருக்கும் இந்தப் புதிய படத்திற்கான தலைப்பு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்பதுடன், படப்பிடிப்பு ஏப்ரல் மாதமளவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது. நடிகர் சூர்யாவின் 38வது திரைப்படமாக திரைகாணவுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசைப்பணியைப் பொறுப்பேற்றுள்ளதுடன், பாடலாசிரியர் விவேக் வரிகளை கோர்க்கவுள்ளாராம்.
இதேவேளை, பிரபல தமிழ்த் திரையுலக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள "NGK" திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்களிடம் அதிகரித்துள்ள நிலையில் "NGK" திரைப்படம் மிக விரைவில் வெள்ளித்திரை காணவுள்ளது. அத்துடன், இயக்குனர் கே.வி.ஆனந்த்தின் "காப்பான்" என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா, அடுத்தடுத்துப் பல படங்களைத் தர கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கின்றாராம்.