தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர்தான் அந்த புகாரை அளித்தது. தன்னை சில இளைஞர்கள் பாலியல் வன்முறை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார்கள் என்று புகார் அளித்து இருந்தார். பொள்ளாச்சி ஊஞ்சவேலாம் பகுதிக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை வீடியோ எடுத்து மிரட்டினார்கள் என்று புகார் அளித்தார். இதையடுத்து பொள்ளாச்சி பொலிஸார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்தது.
இவர்கள் பெண்களை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நண்பர்களின் உறவுக்கார பெண்கள், பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள், கல்லூரி படிக்கும் பணக்கார பெண்களை நேரிலும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு, நட்பாகி, பின் காதல் செய்து ஏமாற்றி இருக்கிறார்கள். காதலை காரணம் காட்டி, இவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்.
காதலன், நட்பு என்ற போர்வையில் பெண்களை அழைத்து செல்லும் இவர்கள், பெண்களை பாலியல் வன்முறை செய்து இருக்கிறார்கள். அதன்பின் அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி இருக்கிறார்கள்.
இதை செய்த கும்பலில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 7 வருடமாக இப்படி மோசமான செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் 5 கோடிக்கும் மேல் மோசடி செய்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
பெண்களை பாலியல் வன்முறை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பெற்று உள்ளனர். பணம் இல்லாத பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறை செய்துள்ளனர். இப்படி பாதிக்கப்பட்டது சில பெண்கள் கிடையாது. 200க்கும் அதிகமான பெண்கள் இப்படி பாலியல் வன்முறை செய்யப்பட்டு, மிரட்டப்பட்டு உள்ளனர்.
தற்போது இந்த பிரச்சனை சில முக்கிய காரணங்களுக்காக மீண்டும் பரபரப்பான ஒன்றாக மாறி இருக்கிறது. இவர்களிடம் இருந்து பொலிஸார் இதுவரை 1500 வீடியோக்களை கைப்பற்றி இருக்கிறார்கள். இதில் இருப்பது எல்லோரும் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் கண்ணீருடன் கதறும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோக்கள் சினிமா நடிகர்கள், சமூக போராளிகளிடம் தற்போது சென்று சேர்ந்துள்ளது. இதனால் தற்போது இந்த பிரச்சனையை அவர்களும் கையில் எடுத்து இருக்கிறார்கள். பொலிஸார் இதில் விசாரிப்பதில் மெத்தனம் காட்டுகிறது என்று இந்த வீடியோவை பார்த்தவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த வீடியோக்கள் மிகவும் பதற வைக்கும் அளவிற்கு இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.