நம் இந்துக்களிடத்தில் தாலிக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. தாலி தங்கமாகவோ ஆபரணமாகவோ மட்டும் பார்க்கப்படுவதில்லை. தாலி உறவு சம்பந்தப்பட்டது. தெய்வீக உணர்வுடன் இரண்டறக் கலந்து பந்தத்தின் அடையாளம் தாலிதான்.
ஒரு திருமணமான பெண்ணின் கழுத்தில் கட்டாயம் தாலி இருக்கவேண்டும் என்பதில் சைவர்களுக்கு உடன்பட்ட கருத்தே மேலோங்கி இருக்கிறது. அதுபோன்றே குங்குமம் வைப்பதும் திருமணமான பெண்களின் முக்கிய கடமைகளில் ஒன்றே. இப்படி இருக்க, வீட்டில் வயதான பாட்டியோ சுமங்கலிப்பெண்ணோ மரணித்து விட்டால் அவரின் மாங்கல்யத்தை என்ன செய்யவேண்டும் என்பதில் நிறையபேருக்கு குழப்பங்கள் இருக்கின்றன.
திருமாங்கல்யம் என்பது மகாலக்ஷ்மி வாசம் செய்யக்கூடிய இடம். ஆதிகாலத்தில் திருமாங்கல்யம் என்றால் ஒரு மஞ்சள் கயிற்றில் - மஞ்சள் கிழங்கை கட்டி வைத்து திருமணத்தின் போது ''தாலி '' கட்டினார்கள். கால ஓட்டத்தில் தங்கத்தின் வருகையும் மக்கள் தங்கத்திலேயே தாலி செய்து அணியும்படி மாற்றமடைந்தார்கள்.
குறிப்பாக இந்துக்கள் இந்த நடைமுறையை தவறாமல் பின்பற்றி வருகின்றார்கள். இப்படி இருக்க ஒரு சுமங்கலி பெண் இறந்தால் அந்த தாலியை என்ன செய்வது? யாருக்கு உரியது? இதுதான் நம்மில் பலருக்கு இருக்கிற முக்கியமான சந்தேகம். இறந்துபோன பெண்மணியின் தாலி என்பது, அவருக்கு மகள் இருக்கும் பட்சத்தில், அந்தத் தாலி மகளுக்குத்தான் சேர வேண்டும். மகள் இல்லை, மகன் மட்டுமே உண்டு என்றால், அது மகனின் மனைவிக்கு அதாவது மருமகளுக்கு போய்ச் சேர வேண்டும் என்பதே இந்துக்களின் நடைமுறையாக இருக்கிறது.
ஆனால் இது தொடர்பில் ஒன்றை சொல்லியே ஆகவேண்டும். இறந்தவர்களின் மாங்கல்யத்தை, அப்படியே பயன்படுத்த கூடாது. அதேபோல், தாலியை, அதாவது திருமாங்கல்யத்தை அப்படியே மோதிரமாகப் பயன்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சாஸ்திரத்தின்படி தாலியை மோதிரமாக பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறார்கள். இதற்கு பதிலாக இறந்தவர் அணிந்திருந்த திருமாங்கல்யத்தின் தங்கத்தை உருக்கி, வேறு நகைகள் செய்யும்போது சேர்த்து செய்தால் நல்லது. திருமாங்கல்யம் என்பது குரு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இந்தத் திருமாங்கல்யத்தை உருக்கி, வேறொரு ஆபரணமாக அணிந்துகொள்வதில் தவறேதும் இல்லை. இதனால், குரு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் இல்லாமல் போகும் என நினைப்பதும் தவறு. தாலி என்கிற குரு, சுக்கிர ஆதிக்கத்துடன், பித்ருவாகிவிட்ட இறந்தவரின் தாலியை வேறொரு ஆபரணமாக அணியும் போது, அதனால் இறந்தவரின் பரிபூரண ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்!
எனவே, இறந்தவரின் திருமாங்கல்யத்தை, திருமாங்கல்யமாகவே பயன்படுத்துவதைத் தவிர்த்து, வேறு நகைகள் செய்யும்போது அந்த தங்கத்தை உருக்கி பயன்படுத்தினால் அதனால் பாதிப்புகள் இல்லை என்று ஜோதிடம் சொல்கிறது.