இந்தியாவுக்கும் நியுசிலாந்துக்கும் இடையிலான 20க்கு 20 தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி டில்லியில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் டில்லியில் வளிமாசடைதல் அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு, டீசல் மின்பிறப்பாக்கிகளுக்கு தடைவிதிப்பதாக உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது.
இதற்கமைய, இந்த 20க்கு 20 போட்டிக்கும் அதற்கான அனுமதியை வழங்க முடியாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதனால் 20க்கு 20 போட்டி நடைபெறும் போது திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டால், மீள மின்விநியோகம் சீரமைக்கப்படும் வரையில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு 1 என்ற அடிப்படையில் தொடர் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், நாளைய தினம் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டி வெற்றியாளரைத் தீர்மானிக்க உள்ளதால், இரு அணிகளும் வெற்றிக்கான வியூகம் வகுத்து களமிறங்க உள்ளன.