மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை அந்த பதவிலியிருந்து அகற்றுவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
தம்மை முதலமைச்சர் பதவிலிருந்து அகற்றுவது அரசியலமைப்புக்கு ஏற்புடையதல்ல என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சரத்ஏக்கநாயக்க அண்மையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை கருத்தில் கொண்டு, அவரை பதவிலிருந்து நீக்குவதை நிறுத்துமாறு மத்திய மாகாண ஆளுனருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் ரஞ்சித் அலுவிகார உள்ளிட்ட 19 பேரின் கையொப்பத்துடன், நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி மாகாண சபையின் பிரதி பொது செயலாளரிடம் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் பல்லேகலை மாகாண சபை செயலாளர் காரியாலயம் மற்றும் திஹன விளையாட்டரங்கு என்பனவற்றை அமைக்கும் போது நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டது உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேவேளை, பதவி நீக்கல் தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷசிந்திர ராஜபக்ஷ ஆகியோர் தனித்தனியாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.