பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து " வோட்ச்மேன்" என்னும் திரைப்படத்தை இயக்குனர் A.L விஜய் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை 'டபிள் மீனிங் புரடக்ஷன்ஸ்' திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக அருண்மொழி மாணிக்கம் தயாரிப்புப் பணியை ஏற்றுள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் திரைகாணவுள்ளது "வோட்ச்மேன்" திரைப்படம்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாருடன் சம்யுக்தா ஹெக்டே இணைந்துள்ள இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் சேர்ந்து கலக்கியுள்ளதுடன், த்ரில்லர் படமாக உருவாகியுள்ள செய்திகள் வெளியாகின்ற நிலையில், எதிர்வரும் 12ம் திகதி படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்புத் தரப்பினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
"வோட்ச்மேன்" திரைப்படத்தின் பட வெளியீடு தொடர்பான விளம்பரப்படுத்தல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றிருந்தது. அதில், திரைப்படத் தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமாரும் கலந்து கொண்டிருந்தார். அவர் இந்தப் படம் பற்றிக் குறிப்பிடுகையில், " வரவிருக்கும் "வோட்ச்மேன்" திரைப்படத்தை குழந்தைகளையும் அருகே வைத்துக்கொண்டு குடும்பமாக ரசிக்கும்படியாக உருவாக்கியிருக்கின்றார்கள். இந்தப் படத்தினுடைய தயாரிப்பாளர் வித்தியாசமான முறையிலான விளம்பரப்படுத்தலில் இறங்கியுள்ளார்.
பொள்ளாச்சி நகரத்தில் சமீபத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் பொள்ளாச்சி நகரத்தின் முக்கிய பல இடங்களில் 50க்கும் மேற்பட்ட CCTV கேமராக்களை பொருத்த இருக்கிறார். வரப்போகும் "வோட்ச்மேன்" பொள்ளாச்சி நகரத்தையே கண்காணிப்பார்" என்றார் பி.டி.செல்வகுமார்.
இதேவேளை,"வோட்ச்மேன்" தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் படம் பற்றிப் பேசும்போது, "பொள்ளாச்சி நகரத்தின் பல இடங்களில் CCTV கண்காணிப்புக் கேமராக்களை பொருத்துவது என்பது ஆரம்பம் மட்டுமே. அத்தோடு நின்றுவிடப் போவதில்லை. இன்னும் பல நல்ல விஷயங்களை முன்னெடுக்கப் போகின்றோம். உதாரணமாக, தற்போது கோடைகாலம் என்பதால் ஆங்காங்கே வெயிலின் பாதிப்பினால் தவிக்கும் சிறு வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் அமைத்துத் தர உள்ளோம்.
சென்னை நகரம் முழுக்க CCTV கண்காணிப்புக் கேமராக்களை பொருத்திக் கண்காணித்ததால் தற்போது குற்றங்கள் குறைந்துள்ளதாக அறிகின்றோம். அதனைத் தொடர்ந்தே இந்த முயற்சியில் நாங்களும் இறங்கினோம். எங்களை முன்னுதாரணமாகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் CCTV கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதற்கு இன்னும் பலர் முன்வந்தால் அதனால் நாங்கள் பெரிதும் சந்தோஷமடைவோம் என்று கூறினார்.
பொள்ளாச்சி நகரத்தில் நாளை மறுதினம் 10ம் திகதி புதன்கிழமை CCTV கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில், அந்த நிகழ்வில் நடிகர் ஜீ.வி. பிரகாஷ் மற்றும் படத்தின் இயக்குனர் A.L.விஜய் ஆகியோரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘நல்ல விஷயம் செய்கிறீர்கள். நாங்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். பெண்களின் பாதுகாப்புக்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள். என்னால் முடிந்த உதவிகளை நானும் செய்வேன். அத்துடன், எமது இந்த படம் குழந்தைகளையும் மகிழ்விக்கும். "நாச்சியார்", "சர்வம் தாளமயம்" படங்களுக்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய பெயரை ஏற்படுத்தி கொடுக்கும்’ என்றார் "வோட்ச்மேன்" கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார்.