இந்த வெற்றியுடன் ஏஎவ்சி ஆசிய கிண்ண பிரதான சுற்றில் விளையாட இந்தியாவின் பிரபல மற்றும் 133 வருட வரலாற்றைக் கொண்ட மோகன் பேகன் தகுதிபெற்றது. அணித் தலைவர் தரிந்து எரங்க (விசா பிரச்சினை), உதவி அணித் தலைவர் தாரக்க சில்வா மற்றும் மொஹம்மத் இஷான் (இருவருக்கும் உபாதை) ஆகிய மூவரும் இப் போட்டியில் விளையாடவில்லை. மொஹமத் பாஹிர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் மொஹமத் பஸால், சலன சமீர,டெனியல் மெக்ரா ஆகியோர் அரைகுறை உடல் தகுதியுடன் 45 நிமிடங்களே விளையாடினர். இவை அனைத்தும் புளூ ஸ்டார் அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமைந்தது. எவ்வாறாயினும் போட்டியின் ஆரம்பத்தில் புளூ ஸ்டார் மிகத் திறமையாக விளையாடி எதிரணிக்கு சோதனை கொடுத்தது. 12ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் பாஹிரின் நீண்ட தூர பந்து பரிமாற்றத்தை பயன்படுத்தி முன்கள வீரர் ப்றின்ஸ் போவாடு கோல் போட எடுத்த முயற்சியை மோகன் பேகன் கோல்காப்பாளர் ஆர்ஷ் அன்வர் தடுத்து நிறுத்தினார்.
ஆனால், பொறுமையுடன் விளையாடிய மோகன் பேகன் 24ஆவது நிமிடத்தில் மனவிர் சிங், கியான் கிரி ஆகியோர் அடுத்தடுத்து கோலை நோக்கி உதைத்த பந்துகள் புளூ ஸ்டார் வீரர்களால் தடுக்கப்பட்டபோது ஜொனி கௌக்கோ விரைவாக செயற்பட்டு தன்னை நோக்கி வந்த பந்தை கொலினுள் புகுத்தி அணியை முன்னிலையில் இட்டார்.
நான்கு நிமிடங்கள் கழித்து புளூ ஸ்டார் பின்கள வீரர்களின் ஓவ்சைட் வியூகத்தில் சிக்காமல் விளையாடிய மோகன் பேகன் தனது கோல் எண்ணிக்கையை மன்விர் சிங்கின் மூலம் இரட்டிப்பாக்கியது. 39ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் கழகத்துக்கும் மேலும் இடி விழுவதாக அமைந்தது. பின்கள வீரர் ஒருவர் பெனல்டி எல்லைக்குள் பந்தை கையால் தட்டடியதால் மோகன் பேகனுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
அதனை இலக்கு தவறாமல் கோலாக்கிய கௌக்கோ, இடைவேளையின்போது மோகன் பேகனை 3 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இட்டார். இடைவேளையின் பின்னர் புளூ ஸ்டார் தடுத்தாடும் வியூகத்துடன் விளையாடி மோகன் பேகனை கட்டுப்படுத்த முயற்சித்தது.
மோகன் பேகன் வீரர்கள் மன்விர் சிங், ஹியூகோ பவ்மவ்ஸ், டேவிட் வில்லியம்ஸ் ஆகியோர் கோல் போட எடுத்த முயற்சிகள் கோல்காப்பாளர் லக்ப்ரிய பெர்னாண்டோவின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்டன. போட்டியின் 77ஆவது நிமிடத்தில் பவ்மவ்ஸ் - மன்விர் சிங் கூட்டுப் பந்து பரிமாற்றத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட டேவிட் வில்லியம்ஸ் மிக இலகுவான கோல் ஒன்றைப் போட்டார். (மோகன் பேகன் 4 - 0)
தொடர்ந்து போட்டி 90 நிமிட முழு நேரத்தைத் தொட 2 நிமிடங்கள் இருந்தபோது மன்விர் சிங் மிகத் திறமையாக பந்தை நகர்த்திச் சென்று போட்ட கோலுடன் மோகன் பேகன் 5 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது