காலநிலை மாற்றம் பூமியின் பசுமையை மட்டுமல்ல, கடல்வாழ் உயிரினங்களையும் மிக மோசமாகப் பாதித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு பெருங்கடல் பகுதி கணிசமாக இருண்டு போயுள்ளதாக, புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் பிளைமவுத் பல்கலைக் கழகத்தை (University of Plymouth) சேர்ந்த ஆய்வாளர்கள் தலைமையிலான குழு, 'உலகப் பெருங்கடல்களின் இருள்மயமாதல்' (Darkening of the Global Ocean) என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
பெருங்கடல்களின் இந்த அபாயகரமான நிலையை இந்த ஆய்வு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
கடல்கள் இந்த அளவிற்கு இருண்டு வருவது ஒரு புதிய சூழலியல் நெருக்கடி மட்டுமல்ல, இது கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நமது கோளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மீதும் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.