கிண்ணத்தை ஏந்தும் எண்ணத்தோடு இலங்கை கிரிக்கெட் அணி. 11 வது உலக கிண்ணத்தில் களம் காணும் ஒரு பலம் வாய்ந்த அணியாக இலங்கை அணி நோக்கப்படுகின்றது.சமபலம் கொண்ட அணியாக அண்மைய தோல்விகளை மறந்து உலக கிண்ணத்தில் கிண்ணத்தை ஏந்தும் எண்ணம்கொண்டு களமாடும் சிங்கங்களாய் களத்தில் கர்ச்சிப்பார்கள் என்பது இலங்கை கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பு எனலாம்.
அவுஸ்ரேலியா,இந்தியா,தென்னாபிரிக்கா ஆகிய அணிகளைத் தொடர்ந்து ஒருநாள் தரவரிசையில் 4 ம் இடத்தில் இருக்கும் இலங்கை அணி இம்முறை குழு-A யில் இங்கிலாந்து, அவுஸ்ரேலியா,நியூசிலாந்து,வங்களாதேஷ் ஆகிய அணிகளை சந்திக்கபோகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய நாட்களில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் 5-0 ,அத்தோடு நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் 4-2 என்று மோசமான தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் ஒரு அணியாக உலக கிண்ணம் போன்ற தொடர்களில் தங்கள் பலத்தைக்காட்டக் கூடிய ஒரு அணியாக இலங்கை அணியை நோக்கலாம்.
இலங்கை அணியின் குறித்த தோல்விகளின் போது இலங்கை அணி பல நெருக்கடிகளை எதிர்கொண்டமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.
சரியான ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியோ ,அல்லது ஆரம்ப துடுப்பாட்டத்தில் களமிறக்கப்பட்ட வீரர்களோ சரியான பங்களிப்பை அணிக்குச் செய்யத் தவறியமை பிரதானமான காரணமாக இருந்தது.
இதைவிடவும் அணியின் துல்லியமான பந்து வீச்சாளரான மலிங்க அணியில் இல்லாமை மிகப்பெரும் பாதிப்பை அணிக்கு கொடுத்தது,அத்தோடு இந்த இரண்டு தோல்விகளின் போதும் இலங்கை அணி எதிர் அணிகளை அவர்களது சொந்த மண்ணிலேயே முகம்கொடுத்தமையும் இன்னொரு காரணமெனலாம்.
இப்படியான நிலைமைகள் கடந்து இப்போது இலங்கை அணி தங்களை கொஞ்சம் பலப்படுத்தியிருக்கிறது.மலிங்க அணிக்கு திரும்பியிருக்கிறார்,லகிறு திருமான நல்ல ஆரம்ப வீரராக அணிக்கு நம்பிக்கை கொடுக்கின்ற நிலையில் உலக கிண்ணத்தில் இலங்கை ரசிகர்களின் உலக கிண்ண ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான மஹேல ,சங்கா,டில்ஷான் ஆகிய வீரர்களின் துடுப்பாட்டம் இப்போது வழமையைவிடவும் அதிக முன்னேற்றம் கண்டிருக்கிறது.
தொடர்ந்தும் சிறப்பாக ஓட்டங்களை நல்ல முறையில் பெற்றுகொள்கின்றமையும் இதற்கான இன்னொரு காரணம் என்று சொல்லலாம்.

உலக கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தவரை 2007 ம் ஆண்டு முதற்கொண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் உலக கிண்ணப் போட்டித் தொடர்களில் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து பங்கெடுத்திருக்கும் அணியாக இலங்கை அணி பார்க்கப்படுகின்றது.
2007ம் ஆண்டு அவுஸ்ரேலியாவிடமும் ,2011 ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியிடமும் இறுதிப் போட்டிக்கு வந்து தோல்வியை தழுவியமை கவலையே !
இம்முறையும் இலங்கை அணி பலமான அணியாகவே பார்க்கபடுவதற்கு அணியின் மூத்த வீரர்கள் காரணமாய் இருக்கிறார்கள்.
இம்முறை பாகிஸ்தானின் சாகிட் அப்ரிடி ,நியுசிலாந்தின் டானியல் வெற்ரோரி ஆகியோரோடு போட்டிகளில் பங்கெடுக்கும் இலங்கையின் மஹேல ஜெயவர்தனவுக்கு இது 5 வது உலக கிண்ணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து தங்களது இறுதி உலக கிண்ணப் போட்டித் தொடரில் ஆடும் சங்ககார,மஹேல ஜெயவர்தன ஆகிய இருவரோடும் சேர்த்து இன்னுமொரு சிரேஸ்ட வீரர் டில்ஷான் ஆகிய மூத்த வீரர்கள் அணிக்கு நம்பிக்கை கொடுப்பார்கள் என்று எதிரபார்க்கலாம்.

அத்தோடு அணியின் தலைவர் மத்தியுஸ்,உதவி தலைவர் திரிமான்ன,சந்திமால்,திமுத் கருணாரத்ன ஆகிய வீரர்களோடு சகலதுறைகளிலும் பிரகாசிக்கும் ஜீவன் மென்டிஸ்,திஸ்சரா பெரேரா ஆகிய வீரர்களும் துடுப்பாட்ட பங்களிப்பை செலுத்தவல்லவர்களே.
அத்தோடு பந்து வீச்சில் கலக்கும் லசித் மலிங்க உபாதையிலிருந்து மீண்டு வந்திருக்கின்றமை அணிக்கு மேலும் புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது,இவரோடு அனுபவ வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர மற்றும் சுரங்க லக்மால் புதுமுக வீரர் துஸ்மந்த சமீரா ஆகிய வீரர்களும் சுழல் பந்து வீச்சில் கைகொடுக்கும் ரங்கன ஹேரத்,சச்சித்திர சேனநாயக்க ஆகிய வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதுவரையான 10 உலக கிண்ணப் போட்டிகளிலும் பங்கெடுத்துள்ள இலங்கை அணி 1996 ம் ஆண்டு அர்ஜுனா ரணதுங்க தலைமையில் ஒரேயொரு உலக கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இதுவரை மொத்தம் 66 உலக கிண்ணப் போட்டிகளில் பங்கெடுத்து தலா 31 வெற்றிகள் 31 தோல்விகளை இலங்கை அணி சந்தித்துள்ளது.
கடந்த 2 உலக கிண்ணங்களிலும் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கும் இலங்கை அணி இம்முறை இந்த இலக்கை அடைவதற்கு கடுமையான சவால்களை சந்திக்கவேண்டிவருமென்றாலும் பன்னாட்டு அணிகள் பங்கெடுக்கும் போட்டிகளில் இலங்கையின் பலம் பல்கிப்பெருகி பலதடவைகள் வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ள நிலையில் இலங்கை அணியின் ரசிகர்கள் உலக கிண்ண கனவுகளோடு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சூரியனின் அன்பான வாழ்த்துக்கள்.
வாருங்கள் சிங்கங்களே வாகைசூடி!
*தில்லையம்பலம் தரணீதரன்.2015.02.13
