சருமம் தொடர்பான பலவித பிரச்சினைகளுக்கு மஞ்சள் மற்றும் வேப்பிலை தனித்தனியே பயன்படுகிறது. இந்த நிலையில் இரண்டையும் சேர்த்து முகப்பரு போக்கும் 'பேஸ் பேக்' ஒன்றை எவ்வாறு தயார் செய்யலாம் என்று இன்றைய அழகுக்குறிப்பு பகுதியில் பார்ப்போம்.
இதற்கு தேவையானவை மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
வேப்பிலை- ஒரு கைப்பிடி (அரைத்தது )
தண்ணீர்- தேவையான அளவு
மஞ்சளில் 'துத்தநாகம்' மற்றும் 'மெக்னீசியம்' போன்ற கூறுகள் அதிகளவு காணப்படுகிறது.
இவை நம் சரும பொலிவுக்கு உதவுவதோடு சருமத்தில் உள்ள மாசுக்களையும் நீக்குகிறது. வேப்பிலையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள மாசுக்களை ஆழ்ந்து சுத்தம் செய்கிறது .
மேலும் இது பருக்களை நீக்குவதோடு பருக்களால் ஏற்படும் வடுக்களையும் மறைக்கிறது. ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு மஞ்சளுக்கு இரண்டு பங்கு அரைத்த வேப்பிலை எனும் வீதத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து குழைத்துக்கொண்டால் பேஸ் பேக் தயார்.
மஞ்சளும், வேப்பிலையும் கொண்டு தயார் செய்த இந்த கலவையினை முகத்திற்கு பூசி அப்படியே பத்து நிமிடம் விடவேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்துவிட வேண்டும். இந்த 'பேஸ் பேக்கில்' மஞ்சள் கலந்திருப்பதால் முகத்தில் அதிக நேரம் வைத்திருக்கலாகாது.
வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டும் பூஞ்சை மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இவையிரண்டையும் பயன்படுத்தி செய்யும் தயாரிக்கும் கலவை பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க வல்லது.
ஒவ்வாமை பிரச்சினைகள் உள்ளவர்கள் வேதிப்பொருட்கள் இல்லாத இயற்கை 'பேஸ் பேக்' பயண்படுத்துகையிலும் சில சரும பிரச்சினைகள் எழுகிறது. எனினும் சில அழகுக்குறிப்புக்களை பின்பற்றும் முன் மருத்துவரை அணுகுதல் நன்று.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் சருமம் அழகும் பொலிவும் பெறும் .