இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்று வரும் 4 ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 10க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அதில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், 14.68 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார்.
அதேபோன்று, ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதனிடையே, 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை ஆதிக்கம் செலுத்தியதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தது.
சமோத் யோதசிங்க மற்றும் சபியா யாமிக் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரர், அதிவேக ஓட்ட வீராங்கனையாக சாதனை படைத்தனர்.
பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அமாஷா டி சில்வா வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.
ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பசிந்து மல்ஷான் தங்கப் பதக்கத்தையும், பெண்களுக்கான முப்பாய்ச்சலில் மதுஷானி ஹேரத் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டனர்.
அத்துடன், பெண்களுக்கான முப்பாய்ச்சலில் சஷினி உபேஷ்கா வெண்கலப் பதக்கத்தையும், பெண்களுக்கான குண்டு எறிதலில் ஓவினி சந்தரசேகர வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
அத்துடன், ஆண்களுக்கான 4 தர 400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணியினர் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தனர்.
இதேவேளை, ஆடவருக்கான 110 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் ரொஷான் ரணதுங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.