இந்திய கிரிக்கெட்டில் தொடரும் சிக்கல் நிலை, மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் இந்திய உயர் நீதிமன்றம்.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைவராக முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் நியமிக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.
இது பற்றி நேற்றைய தினம் முதலில் வெளியான செய்தியை
இங்கே வாசியுங்கள்.
இந்திய கிரிக்கெட் சபையின் தலைமை பொறுப்பு கிடைத்தால் சந்தோசப்படுவேன். அத்தோடு எந்த சவாலாயினும் அதனை எதிர் கொண்டு உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக சுயாதீன விசாரணைகள் இடம்பெற சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்ற கருத்தை கவாஸ்கர் வெளியிட்டுள்ளார்.
இப்படி இவர் கருத்துக்களை வெளியிட்டாலும் பல கோணங்களில் பலரால் இந்த உயரிய பதவி குறிவைக்கப்படுகின்றது.
வங்காள விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் மடான் மித்த்ராவின் கருத்துக்களை பொறுத்தவரை அந்த பதவியில் ஆளுமை பொருந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி நியமிக்கபடுவதே சிறந்தது என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் என்னையும் மறந்து விடாதீர்கள் என்ற போர்வையில் எக்குத் தப்பான கருத்துக்களை அடிக்கடி அள்ளி வீசிவரும் சர்சைக்குரிய பிஷன் சிங் பேடியின் கருத்துப்படி அந்த பதவியில் முன்னாள் BCCI தலைவர் சசாங் மனோகர் நியமிக்கபடவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் வீரர்கள் கும்ப்ளே,ஸ்ரீகாந்த்,டிராவிட் ஆகிய வீரர்கள் இந்திய கிரிக்கெட் சபையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

இப்படியான சிக்கல்களுக்கு மத்தியில் IPL ஆரம்ப விழா ,அறிமுக விழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டுபாயில் ஒழுங்கு செய்யபட்டிருந்து பிற்போடப்பட்டு கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் பிந்தி கிடைத்த BCCI யின் தகவல்படி இப்படியாக கவாஸ்கரின் வரவை இந்திய கிரிக்கெட் சபையில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்றும் பேசப்படுகின்றது.இவருக்கு பதிலாக முன்னாள் ஹைதராபாத் சுழல்பந்துவீசாளர் சிவ்லால் யாதவ் அல்லது அனில் கும்ப்ளே ஆகியோரின் வரவையே BCCI யின் உயர் மட்டத்தினர் விரும்புவதாகவும் அறியக்கிடைக்கிறது.
இந்த சிவ்லால் யாதவ் BCCI யின் பிரதி தலைவராக இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை BCCI யின் யாப்பு பிரகாரம் சபையின் தலைவர் மரணித்தாலோ அல்லது அவரால் செயற்பட முடியாது போனால் அடுத்த 15 நாட்களுக்குள் அடுத்த தலைவர் தேர்வாகும் வரை அந்த தலைமை பொறுப்பை செயலாளரே கவனிக்க வேண்டும் என்ற விதி முறை இருக்கின்றமையும் சுனில் கவாஸ்கர் பதில் தலைவராவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது எனலாம்.

இந்த நிலையில் அடுத்து வரப்போகும் நாட்களில் இந்திய கிரிக்கெட் சபையில் திடுக்கிடும் மாற்றங்களும் ,மாறுதல்களும் வரலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது.