ஆசிரியர் ஒருவர் நைட்ரேட் விஷம் கலந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கிய சம்பவம் ஒன்று, சீனா நடந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோசூவோ நகரில், கடந்த மார்ச் மாதம் 27 ம் திகதி இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. சம்பவத்தன்று மெங்மெங் மழலையர் பள்ளியில் உணவு நேரத்திற்கு பின்னர், அத்தனை குழந்தைகளும் கடும் உடல் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர். அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் குழந்தைகள் அனைவரையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியப் பரிசோதனையின்போதே குழந்தைகள் அனைவருக்கும் வழங்கப்பட்ட உணவில் நைட்ரேட் ரசாயனப் பொருள் கலக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சோடியம் நைட்ரேட்டை (Sodium nitrate) பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் மீன் தயாரிப்பு உணவுகள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
ஆனால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அதிக அளவில் நச்சுத்தன்மையை தரக்கூடிய பண்பு சோடியம் நைட்ரேட்க்கு உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக அங்குள்ள காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதில் குறித்த மழலையர் பள்ளி ஆசிரியை குழந்தைகளுக்கு மதிய உணவாக கஞ்சி அளித்ததும், அவர் உணவில் நைட்ரேட் கலந்துகொடுத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியை உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இதனிடையே மருத்துவ சிகிச்சையின் மூலம் 15 குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும், 7 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் ஒரு குழந்தைக்கு மட்டும் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியையிடம் தீவிர விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.