இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைப்பிடிக்கும் ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிடட நிலையில் நோன்பு கஞ்சி தயாரித்து பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்கள் உட்கொள்வதோடு ஏனையவர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.
இது சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட. அத்தகைய நோன்பு கஞ்சியை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இன்றைய சமையல் குறிப்பில் பார்ப்போம். இதனை தயாரிக்க தேவையானவை
பச்சை அரிசி- ஒரு கப்
பாசி பருப்பு- அரை கப்
கடலை பருப்பு- அரை கப்
துவரம்பருப்பு- அரை கப்
சின்ன வெங்காயம்- எட்டு
பட்டை- ஒன்று
கிராம்பு- நான்கு
தக்காளி- ஒன்று
இஞ்சி- சிறிதளவு
பூண்டு- பத்து பல்
பச்சை மிளகாய்- மூன்று
தேங்காய் பால்- ஒரு கப்
எண்ணெய்- ஒரு தேக்கரண்டி
நெய்- ஒரு தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
கொத்தமல்லி புதினா கருவேப்பிலை- தேவையான அளவு.
ஆகியனவாகும்.
முதலில் அரிசி, கடலை பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை நன்கு வறுக்க வேண்டும். பின்னர் பச்சை அரிசி, வறுத்த பாசிப்பயறு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெங்காயம், தக்காளி, நறுக்கிய இஞ்சி, பத்து பல் பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, கரட் ஆகிய அனைத்தையும் சேர்த்து எட்டு கப் தண்ணீர் விட்டு நான்கு அல்லது ஐந்து விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து மீண்டும் ஒரு முறை ஐந்து விசில் வரும் வரை காத்திருக்கவும். தேவைக்கேற்ப கஞ்சி பதமாக வரும்வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடுங்கள். பின்னர் தேங்காய் பால் சேர்த்து கிளறி விட்டு ஐந்து நிமிடங்கள் கொதித்த பின் அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து தாளிக்க வேண்டும்.
இந்த தாளிப்பை தயார்நிலையிலுள்ள கஞ்சியில் சேர்த்து ஒருமுறை கிளறினால் கமகம என்ற வாசத்துடன் சுவையான நோன்பு கஞ்சி தயாராகிவிடும். தேவையேற்படின் இத்துடன் மட்டன் எலும்பு கறியையும் சேர்த்து வதக்கி கொள்ளலாம். கஞ்சி மேலும் சுவையாக இருக்கும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி சுவையான நோன்பு கஞ்சியை தயாரித்து கொள்ளலாம்.