சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
'வாடிவாசல்' திரைப்படம் சில முக்கிய காரணங்களால் தாமதமாகி வருவதை அடுத்து, சிம்பு படம் தொடங்கப்பட்டதாக கூறிய அவர், "கண்டிப்பாக இது வடசென்னை இரண்டாம் பாகம் கிடையாது.
தனுஷ் நடிக்கும் திரைப்படம் தான் வடசென்னை - 2”என்று வெற்றிமாறன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனால்,இந்தத் திரைப்படத்தில்
'வடசென்னை' திரைப்படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் வருகின்றன என்றும், வடசென்னை திரைப்படத்தின் கதையும் இந்தத் திரைப்படத்தின்
கதையும் ஒரே காலகட்டத்தில் நடக்கும் கதை என்றும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனுஷ்தான் 'வடசென்னை' திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அவருடைய அனுமதி இன்றி அந்தத் திரைப்படத்தில் உள்ள காட்சிகளையோ, கதாபாத்திரங்களையோ பயன்படுத்த முடியாது.
இது குறித்து அவரிடம் தான் பேசியபோது, "நீங்கள் தாராளமாக கதாபாத்திரங்களையோ, காலகட்டத்தையோ பயன்படுத்தி கொள்ளுங்கள்” என்று தனுஷ் கூறியதாக வெற்றிமாறன் தெரிவித்தார்.