தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய 'அட்டகத்தி', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை', 'தங்கலான்' ஆகிய திரைப்படங்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித்திடம் செய்தியாளர்கள் 'வேட்டுவம்' மற்றும் 'சார்பட்டா 2' திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பா.ரஞ்சித், "`வேட்டுவம்' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது, 2026ல் 'சார்பட்டா பரம்பரை 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும்" என்ற அப்டேட்டை கொடுத்துள்ளார்.