தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியின் பிளே ஓப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி என்பன கொல்கத்தா மற்றும் அஹமதாபாத் ஆகிய இடங்களில் நடத்தவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 15 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவின் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இப்போட்டித் தொடரின் பிளே ஓப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து கங்குலி கூறுகையில்,
"பிளே ஓப் சுற்றில் இறுதிப் போட்டிக்கு முதலாவது தகுதிபெறும் அணிக்கான போட்டி மற்றும் வெளியேறும் அணிக்கான போட்டி ஆகியன முறையே மே மாதம் 24 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் கொல்கத்தாவில் நடத்தப்படவுள்ளது. அத்துடன், இறுதிப் போட்டிக்கு இரண்டாவது தகுதி பெறும் அணிக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி என்பன முறையே மே மாதம் 27 ஆம், 29 ஆம் திகதிகளில் நடைபெறும்.
லீக் போட்டிகளின்போது 50 சதவீத பார்வையாளர்களுக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டிருந்தபோதிலும், பிளே ஓப் சுற்று மற்றும் இறுதிப் போட்டிக்கு 100 சதவீத பார்வையாளர்களுக்கு போட்டிகளை கண்டுகளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றார்.