தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இயற்கையாக உடலில் எண்ணெய் அதிகம் சுரப்பதால் முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிவது போன்று இருக்கும். இவ்வாறு இருப்பதை எண்ணெய் பசை என்கிறோம்.
இந்த பிரச்சினையை போக்கும் சில அழகுக்குறிப்புகளை பற்றி இன்றைய இந்த பகுதியில் பார்ப்போம். இதற்கு தினமும் ஐந்து அல்லது ஆறு முறை றோஸ் வாட்டர் கொண்டு முகத்தை கழுவுவது சருமத்திலுள்ள எண்ணெய் பசையினை போக்கி முகத்தினை பிரகாசமாக காட்டும்.
அதேபோல எலுமிச்சை சாற்றை கலப்புகள் ஏதுமின்றி அப்படியே முகத்திற்கு தடவி பதினைந்து நிமிடங்களுக்கு விட்டு பின்னர் கழுவி விட சருமத்தின் எண்ணெய் பசை நீங்கும். மேலும் பருக்களும் குறைவடைந்து விடும். அதேபோல வெள்ளரிக்காயை அரைத்து அதனை முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்களின் பின்னர் முகம் கழுவுதல் வேண்டும்.
இதனை தினமும் இரண்டு தடவையேனும் செய்து வர முகத்தில் எண்ணெய் தன்மை குறைவடையும். அதேபோல ஒரு சுத்தமான பருத்தி துணிக்குள் ஐஸ் கட்டிகள் சிலவற்றை வைத்து முகத்திற்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வது சருமத்தின் மென்மைக்கு உதவுவதோடு எண்ணெய் தன்மையையும் இல்லாது செய்கிறது. அதேபோல வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து அதனை சிறிதளவு நீரில் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும்.
இவ்வாறு செய்து வருவது எண்ணெய் தன்மையினை இல்லாது செய்வதுடன் பருக்களையும் போக்குகிறது. அதேபோல முடடையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்களின் பின்னர் முகத்தை கழுவி வர சருமத்திலுள்ள எண்ணெய் பசை தன்மை நீங்குவதுடன் சருமமும் மிருதுவாகும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் சருமத்தின் எண்ணெய் பசை தன்மை நீங்கி சருமம் பொலிவுடனும் அழகுடனும் காட்சி தரும்.